Sunday, February 11, 2007

இணையாத பாலம்





"இணையாத பாலம் இருந்தென்ன லாபம்"
இந்த ஸ்லோகன்தான் இப்ப கோவையில் அதிகமா பேசப்படும் வார்த்தைகள். கோவை கிழக்கு தொகுதியை சேர்ந்த ஒண்டிப்புதூர் அப்டீங்கற ஊர்ல ஒரு நாலு வருசத்துக்கு முன்னாடி ரயில்வே மேம்பாலம் கட்ட ஆரம்பிச்சாங்க. ஆரம்பிச்சப்ப ‍ஒரே ஜோராதான் இருந்தது. அந்த ரோடு திருச்சி ரோடு அதிகமான அளவு போக்குவரத்து உள்ள சாலைதான். அதை அடைத்துவிட்டு ஊருக்கு உட்புறமாக உள்ள சிறிய சாலையில் அதுவும் இரண்டு ரயில்வே லைன்களை கடந்து செல்லும் பாதையை ஒதுக்கினார்கள். சரி ஒரு வருடம்தானே என்ன செய்வது என்று அனைவரும் பொருத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.


பிறகு திடீர் என்று பாலத்தின் நடுவே அதாவது இருப்பு பாதை மேல் கட்ட வேண்டிய பகுதியை மட்டும் அப்படியே விட்டு விட்டார்கள் கேட்டதற்கு அது மத்திய அரசு வேலை என்று விளக்கம் வந்தது. சரினு அதுக்கு ஒரு வருசம் போயிடுச்சு. இப்டியே கட்டி கட்டி கடந்த நான்கு வருட காலமா கட்டியும் இன்னும் இணைய மாட்டேங்குது பாலம். ஸ்பீட் படத்துல கிளைமேக்ஸ்ல வர்ர மாதிரி வண்டியெல்லாம் வேகமா போயி ‍‍ஹை ஜம்ப் பண்ணிதான் போகனும் போலயிருக்கு.


இதுல மாற்று பாதையில போயிட்டு இருக்குற பேருந்துகள்ல பயணம் செய்யற பயணிகள் எல்லாம் ரொம்ப பாவப்பட்டவங்க. ஏன்னா எப்ப பாரு ரெண்டு ரயில்வே லைன்லயும் ரயில் போயிட்டும் வந்துட்டும் இருக்கும் அதனால அடிக்கடி கேட் போட்டு குறைந்தது முக்கால் மணி நேரமாவது நிறுத்தி வச்சிடுவாங்க. குறிப்பிட்ட நேரத்துக்கு யாராலயும் போக வர முடியாது. இதுல கொடுமை என்னன்னா மழை வந்தா அந்த வழியில ஒரு சின்ன ஓடை உருவாகி தண்ணி போயிட்டேயிருக்கும். அப்பவெல்லாம் இந்த இரு சக்கர வாகனத்துல போறவங்க நிலைமைய நினைச்சாதான் பரிதாபம்.


ஆக மொத்தத்தில ஊர்ல பல பேருக்கு இந்த பாலம் திறக்கலையேனு மிகப்பெரிய வருத்தம் இருக்குது இதுனால பல கோடி பொருளாதார நஷ்டம், எரிபொருள், நேரம் இப்டியே சொல்லிட்டே போகலாம். இதைய எப்ப திறப்பாங்கனு தெரியல ஆனா கடந்த ஒரு மாதமா கொஞ்சம் சுறுசுறுப்பா ரயில்பாதை மேல இருக்கற பகுதிய இணைச்சிட்டு இருக்காங்க.





இவ்வளவு கஷ்டத்துக்கு நடுவிலயும் இப்ப திறப்பாங்க அப்ப திறப்பாங்கனு மக்களும் பொறுமையா நாலு வருசத்த ஓட்டிட்டாங்க. இப்ப அதெல்லாம் பிரச்னையில்ல கோவையில பொதுவா பொழுது போக்கறதுக்கு ஏத்த மாதிரி வசதியா பூங்காக்களோ இல்ல கடற்கரை ஆற்றங்கரை எதுவும் இல்ல. அதனால நம்ம ஊர் மக்கள் எல்லாம் என்ன பண்ணுனாங்க நடை பயிற்சி, உடற் பயிற்சி, மாலையில ஒரு சின்ன வாக்கிங் போக இப்டி எல்லா விதத்திலயும் அந்த பாலத்தைதான் பயன்படுத்திட்டு இருக்காங்க. இந்த பாலத்தை திறந்தா மக்களோட ஒரு பொழுதுது போக்கு இடம் இல்லாம போகப்போகுது. :(