Saturday, January 21, 2006

செய்திப் பஞ்சம்

வரவர வாரஇதழ்கள் ஏன்தான் இப்படியாகிறதோ, தெரியவில்லை. வாரஇதழ் என்றவுடன் நினைவுக்கு வருவது ஆனந்த விகடன், குமுதம் போன்ற சில புத்தகங்கள். ஆனால் அவற்றில் வரும் விசயங்களை பார்த்தால் சினிமா எக்ஸ்பிரஸ் என்று பெயர் மாற்றிவிடலாம் போல் உள்ளது. இந்த வாரம் வார இதழ் வாங்கி படிக்க ஆரம்பித்தால் சரியாக முதல் 52 பக்கங்களுக்கும் முழுக்க முழுக்க சினிமா சினிமா வேறு ஏதும் இல்லை. அட தமிழ்நாட்டில் சினிமாவைத்தவிர ‍எழுதுவதற்கு வேறு விசயங்களே இல்லையா?. முன்பெல்லாம் வாரஇதழ் படிக்க போட்டியாக இருக்கும். நகைச்சுவை, சிறுகதைகள், கட்டுரைகள், ஆன்மீக பயணக்கட்டுரை கொஞ்சம் சினிமா என இருந்தது. தற்போது அட்டை படத்தில் தொடங்கி சினிமா நடிகைகளின் பேட்டி, நடிகர்களின் பேட்டி, இயக்குநர்களின் பேட்டி மற்றும் ஒளிப்பதிவாளர், ஒப்பனையாளர் என முழுக்க முழுக்க சினிமா பற்றியேதான். அது பரவாயில்லை நகைச்சுவையில்கூட நடிகைகளின் படங்கள். முன்பெல்லாம் நகைச்சுவைக்கு கார்ட்டூன் வரைந்து கொண்டிருந்தார்கள் தற்போது அதுவும் இல்லை. ஆக மொத்தத்தில் வார இதழ்களின் எழுதுவதற்கு வேறு செய்திகளே இல்லையெனும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. இதில் மட்டும் எல்லா வார இதழ்களும் போட்டி ‍போட்டுக் கொண்டு சரிக்கு சரியாக இருக்கின்றது. இந்த வார இதழில் இந்த நடிகை பேட்டி என்றால் மற்றொரு வார இதழில் வேறு நடிகை பேட்டி என சபாஷ் சரியான போட்டியாக உள்ளது. இந்த போட்டி வேறு ஏதாவது கதை, கட்டுரை விசயத்தில் இருந்தால் பரவாயில்லை. இப்படி சினிமா பற்றி ‍செய்திகளை படிக்க இந்த வார இதழை படிக்க வேண்டியதில்லையே. ஏதாவது ஒரு சினிமா பத்திரிகை வாங்கினாலே‍ போதுமே?.

7 comments:

Unknown said...

அவர்கள் வயிறும் நிறையணும் இல்ல... எது விக்குதோ அதைத் தானே போடமுடியும்.
வார இதழ்கள் மட்டுமா... நம்ம உலகிலேப் பாருங்க.. சினிமாப் பத்தி எழுதுனாத் தான் படிக்கிறாய்ங்க.. இன்னிக்கு தேதியிலே நல்லா விக்குறது சினிமா.. அடுத்தது ஆன்மீகம் ரெண்டும் சேர்ந்தா ஓஹோ தான் போங்க...

அனுசுயா said...

சினிமா செய்திகளால் பணம் வரும் என்று சொல்ல முடியாது. சில நல்ல வாசகர்களை இழக்கவும் நேரும்.

- யெஸ்.பாலபாரதி said...

இன்று பத்திரிக்கை படிப்பவர்களில் பாதி சதவீதத்தினர் இளைஞர்கள்.. அதிலும் வேலைக்குப் போகும் இளைஞர்கள் தான்.

மெத்தபடித்தவர்கள் எல்லோரும் ஆங்கில மோகத்தில் ஆங்கிலப் பத்திரிக்கைகளின் பக்கம் சாயும் போது(தமிழகத்தின் வர/மாத இதழ்களின் விற்பனையில் 30/35/40 என்று ஆங்கில பத்திரிக்கைகளின் வ்ற்பனை அதிகரித்து வருகிறது.) +12 வரை படித்து வேலைக்குப் போகும் ஆண்களை குறி வைத்து இவர்கள் காய் நகர்த்துகின்றார்கள்.

அதனால் அவர்களை மட்டும் குறை சொல்லி எதுவும் ஆவதற்கில்லை. மொத்தப் படித்தவர்களின் கவனம் கொஞ்சம் தமிழ் பக்கமும் திரும்பினால் விரும்பியதை பெற முடியும்.

அனுசுயா said...

பால பாரதி அவர்களே தங்களின் வருகைக்கு நன்றி. படித்த இளைஞர்கள் தமிழை மறந்து விட்டார்கள் என கூறுவது தவறு. அப்படியென்றால் இத்தனை வலைப்பதிவுகள் தமிழில் ஏற்பட சாத்தியமே இல்லை

அனுசுயா said...

நன்றி திரு ஞானபாலன் அவர்களே. தங்களின் கருத்து மிக சரி. வாசகர்கள் புறக்கணித்தால் நல்ல செய்திகள் இடம் பெற வழி இருக்கிறது.

Sathish said...

Innum iruku anu, vizhambara pakkangal, kadhai matrum katturai'yil periya, idam vitta ezhuthukal. Ezhudiyadai vida appagangazhil periya padangal. Edhao pakkangazhai nirappum muyarchi'agave padugiradu.

அனுசுயா said...

உண்மைதான் திரு சதீஷ் அவர்களே. படங்கள் பெரிய எழுத்துகள் விளம்பர படங்கள் இப்படி பக்கத்தை நிரப்ப எத்தனையோ வழிகளை கடைபிடிக்கியார்கள்.