Wednesday, July 18, 2007

செவ்வந்தி







ஆயுத பூ‍ஜை சரஸ்வதி பூஜை வந்தா கண்டிப்பா எல்லா பக்கமும் சும்மா பளிச்னு இந்த செவ்வந்தி பூ கடை போட்டிருப்பாங்க. யார் யாரோ திடீர் திடீர்னு கடை போட்டு வியாபாரம் ரெண்டு நாள் செய்வாங்க. மழைக்கு வரும் காளான் போல இந்த கடை தோன்றி மறையும். நாமும் அந்த பூவ வாங்கி சாமிக்கு போட்டு பூஜை பண்ணுவோம் ஆனா ஒரு நாள் கூட அதோட பூர்வீகம் என்ன அதனோட குணங்கள் என்னனு யோசிச்சது இல்ல.
செவ்வந்தி பூ பத்தி தெரிஞ்சுக்கலாம்னு கூகுளாண்டவரையும் விக்கி அண்ணனையும் போய் கேட்டா அப்டி ஒரு பேரே இல்லைனு சொல்லிபுட்டாங்க. அட கொடுமையே இது என்ன நம்ம பூவூக்கு வந்த சோதனையின்னு தேடுனப்ப இந்த வலைப்பூ கிடைச்சது. யாரோ ஒரு நல்லவங்க என்ன மாதிரியே பூக்கள பத்தி பதிவுகளா போட்டு தள்ளியிருக்காங்க. அவங்க யாரு எவருனு தெரியல ஆனா அவங்க புண்ணியத்துலதான் தெரிஞ்சுது செவ்வந்திப்பூ பேரு க்ருசாந்தேமம் (Chrysanthemum). இந்த வார்த்தை கிரேக்க வார்த்தையில இருந்து வந்ததா சொல்றாங்க.









இந்த பூக்கள் பல நிறங்களில் இருக்கின்றன. மஞ்சள் நமக்கு தெரியும் அதுபோக சிவப்பு, ஆரஞ்சு இப்டி நிறைய கலர்ல இருக்குதுங்க. ஆனா நாம சாமிக்கு வெக்கறது மஞ்சள்தானுங்களே. அது போக வெள்ளை கலரும் வெப்போம்.

அப்புறம் இத முக்கியமா ஜப்பான் சீனாவுல தானுங்க வளர்த்து பயன்படுத்தறாங்க. ஆனா அவங்க இத மன்னரோட சின்னமாவும் துக்கத்தோட வெளிப்பாடாவும் நினைக்கிறாங்க. ஜப்பானுல இத மகிழ்ச்சியான புனித சின்னமா பாக்கறாங்க. ஊருக்கு ஊரு ஒரே பொருள் வெவ்வேறு விதமா பார்க்கபடுது.





இந்த பூக்களுக்குனு பல மருத்துவ குணம் சொல்லறாங்க முக்கியமா இதிலிருந்து தயாரிக்கபடும் ஒரு ரசாயனம் சிறந்த கொசு மற்றும் பூச்சி கொல்லியா பயன்படுது. ஆனா இதுல இருக்கற ரசாயனம் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தறதில்ல அது மட்டும் இல்ல இது பயோ டீ கிரேடபுல் (அதாங்க இயற்கையா மட்கும் பொருள்) அதனால சுற்றுசூழல் பாதிப்பு சுத்தமா கிடையாது. கொஞ்சம் பேரு இதனோட இதழ்கள காய வெச்சு டீ தயாரிச்சு சாப்பிடறாங்களாம் நல்லா இருக்குனு போட்டு இருக்குது குடிச்சு பார்த்தாதான் தெரியும்.

Wednesday, July 11, 2007

எட்டாவது சாதனைகள்

நம்ம கச்சேரி தேவ் என்னைய எட்டு போட்டு காட்டி‍யே ஆகனும்னு சொல்லிபுட்டாக அவரு கூப்புட்ட எல்லாரும் போட்டுட்டாங்க நான்தேன் கடைசி. ம் என் எட்டு சாதனைகள் கீழே போடறேன் யாரும் பயந்து அல்லது வெறுத்து போயி திட்டாதீங்க.

‍என் வலையுலக சாதனை

1. முதன் முதல்ல பதிவு எழுதுனப்ப நமக்கு (இந்தியாவும் உலக அதிசயமும்) என்ன எழுத தெறியும் சும்மா வெட்டி வேலைனு நினைச்சுதான் ஆரம்பிச்சு கிறுக்கினேன். அதையும் படிச்சுட்டு நல்லா இருக்குனு தமிழ் நாளிதழ் ஒன்னு (தினமலர்) பிரசுரிச்சு இருந்தாங்க. இது ஒரு சாதனைதான் என்ன பொறுத்தவரைக்கும்.


2. அடுத்து நம்ம ஜி கெளதம் அவங்க ஒரு தடாலடி போட்டி வெச்சிருந்தாங்க. படம் போட்டு அதுக்கு கவிஜ எழுதனும். அதுதான எனக்கு ஈசியான வேலையாச்சே. எழுதியிருந்தேனுங்க அதைய குங்குமத்துல கூட போட்டிருந்தாங்க. அதை படிச்சிட்டு என் நட்பு வட்டம் அடிச்ச நக்கலுக்கு அளவே இல்ல அது வேற விசயம்.

3. சுடர் ஏத்த சொன்னாங்கனு ஏத்துனேன் நானும் அது கொஞ்சம் உறுப்படியாதான் இருக்குனு எல்லாரும் சொன்னாங்க. அதனால அதையும் சேர்த்துட்டேன்.



4. காந்தார கலை பத்தி ஒரு பதிவு எழுதினேன் அது பூங்கா இதழில் வந்தது. பாவம் புத்தருக்கு கொஞ்சம் மரியாதை கிடைச்சது. :)

இன்னும் நிறைய சாதனைகள் பண்ணனும்னு ஆசைதான் ஆனா பாருங்க நமக்கு எழுதறது வரவே வராது. மத்தவங்கள நக்கல் பண்றது மட்டும் கொஞ்சம் நல்லா வரும் அதனால அதை மட்டுமே பண்ணிட்டு இருக்கேன். இப்டியே சொல்லிகிட்டே போன இதுக்கு பேரு விளம்பரம்னு சொல்லு வாங்க. அதனால (அதனால மட்டும்தான்) கொஞ்சம் என் பெருமைகளை அடக்கி வாசிக்கிறேனுங்க.

ஒன்னா ரெண்டா சொக்கா எட்டு சாதனைய போடனுமாமே என்ன போடுவேன் எப்படி போடுவேன். எதை போடுவேன். அதனால போதும் நிறுத்திக்கிறேன். இத்தோட நிறுத்திக்கிறேன். கிட்ட தட்ட எல்லாரும் எட்டு போட்டுட்டாங்க. இருந்தாலும் வடுவேனா எனக்கு கிடைச்சத அவங்களும் அனுபவிக்கனும்ல
நான் கூப்பிடற எட்டுபேரு

1. எப்பபாரு சீரியசா மட்டுமே பதிவு போடற கோபாலன்
2. சவுண்ட் பார்ட்டினு பேர் வெச்சிட்டு அமைதியா இருக்கற உதயகுமார்.
3. கபீர் பத்தி எழுதற திரு உமேஷ் அய்யா
4. கவுஜனு என்னமோ எழுதற கமல்ராஜா
5. எப்பவாது பதிவு போடும் மனசு
6. டெக்னிகலா எழுதற அருண்குமார்
7. மதுரைய சேர்ந்த (மீட்ட) பாண்டியன்
8. புதுகை பாண்டியன் அண்ணாச்சி (ஆங்கிலத்தில எட்டு போட்டாலும் பரவாயில்ல‍ை)

விளையாட்டின் விதிகள்:


1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

Tuesday, July 03, 2007

இணைய நண்பர்கள் சந்திப்பு 3

சில ஒளிப்படங்கள்...


ரொம்ப பிசியா நடக்குது கூட்டம்.

போண்டா குடுக்கலீனு யாரும் சொல்லகூடாதுல்ல அதான் போண்டா மற்றும் கேசரியுடன் படம் எடுத்து பதிவு போட்டு இருக்கிறேன்... :)



மழை வந்ததால் கூட்டம் வெளியில் இருந்து வீட்டுக்கு உள்புறம் சென்று தொடர்ந்தது.













Monday, July 02, 2007

இ‍ணைய நண்பர்கள் சந்திப்பு - 2

நேற்று காலை தொடங்கிய சந்திப்பில் அனல் பறந்ததுஎப்போதும் விளையாட்டாய் போகும் சந்திப்பு நேற்றோமிக சீரியசாய் போனது .சில விவாதங்கள் :
1.தமிழ்மணம் ஆரம்பிக்கபட்டதன் நோக்கம் என்ன -காசி அவர்களின் பதில்
2.. நான் வீரப்பனை பிடிக்கும்போது அந்த படையில்வேலை பார்த்தேன் துறை சார்ந்த ரகசியங்களைவெளியிடலாமா - ஓரு போலீஸ் அதிகாரி கேட்டார்
3.விடாது கருப்பு பல நன்மைகளும் செய்துள்ளார் -நண்பர் ஒருவர் தகவல்
4.கம் யூனிஸ்டுகள் 100 சதவீத தீர்வை தரமுடியுமா-செல்லா அதிரடி கேள்வி
5.அசுரனை ஏன் விலக்கினீர்கள் ,எனது கேள்விக்குமுத்தமிழ் நிர்வாகி திணறல்
6.பிளாக்கர்கள் இனி என்ன செய்யலாம் -அனைத்து ஊடகங்களிலும் பிரபலபடுத்தலாம் தகவல்
7.திருப்பூரில் இருந்து கலந்து கொண்ட ஓனர் ஒருவரின்வலைப்பூக்கள் பற்றிய கருத்து -நான் ஒரு திராவிட விரும்பி
8.தமிழ்மணத்தில் மக இக வின் ஆதிக்கமா - செல்லா குற்றச்சாட்டுஎதிர்பார்க்காத அளவு நிறைய பேர் கலந்து கொண்டதாலும் புதிதாக நிறைய பேர் வலைபதிவர் ஆகி இருப்பதும் வரவேற்க தக்க விசயங்கள்

இதெல்லாம் தியாகு எழுதியது இதன் விரிவான விளக்கம் அவரே எழுதுவாருங்க

கோவை இணைய நண்பர்கள் சந்திப்பு - 1

நேற்று (01-07-07) இணைய நண்பர்கள் சந்திப்பு கோவையில் இனிமையாக நடந்து முடிந்தது. ‍நேற்று காலை 10 மணியளவில் ஆரம்பித்த சந்திப்பு மாலை 5.30 வரை அடாத மழையிலும் விடாது நடந்தது. இடம் கவுண்டம்பாளையத்தில் உள்ள மஞ்சூர் ராஜா அவர்களின் இல்ல மூன்றாம் தளத்தில் நடந்தது.
இதன் தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதே என எண்ண வேண்டாம். ஏனெனில் இதில் கலந்து கொண்டவர்கள் வெறும் வலைப்பூ வைத்திருப்பவர்கள் மட்டும் அல்ல, முத்தமிழ் குழுமத்தில் உள்ளவர்கள் மற்றும் தமிழ்பயணி வலைதளத்தை சேர்ந்தவர்கள் எனவே இதற்கு பெயர் இணைய நண்பர்கள் சந்திப்பு என்று வைத்தோம்.

கலந்து கொண்டவர்கள் 15 பேர் கீ‍ழே பட்டியலில் உள்ளவர்கள்.

1. கமல்ராஜா

2. உமேஷ்

3. வின்சென்ட்

4. K.P.குப்புசாமி

5. காசி (தமிமணம்)

6. பாண்டியன்

7. வி.கனகராஜ்

8. ஓசை செல்லா

9. தியாகு

10. செந்தில்குமார்

11. யுவராஜ் சம்பத்

12. நம்பிக்கை பாண்டியன்

13. தமிழ்பயணி சிவா

14. மஞ்சூர் ராஜா

இவங்ககூட நானும் கலந்துகிட்டேன் :)


சரி இன்னும் என்ன பேசுனோம் அப்புறம் புகைப்படங்கள் எல்லாம் அடுத்த பதிவுல பாக்கலாம். இப்போதைக்கு கொஞ்சம் ஆணி புடுங்கனும் வர்ட்டா :)

Thursday, June 28, 2007

மழையில் ஓரிதழ்



பெருமழைக்கு
ஒடிந்து சிதறும்
வர்ண மலர்கள்
சாயம் போகவில்லை
ஓரிதழும்

Sunday, June 24, 2007

இணைய நண்பரகள் சந்திப்பு, கோவையில்

                   
அன்பின் நண்பர்களுக்கு வரும் ஜீலை 1 (ஒன்றாம்) தேதி ஞாயிறுகால‍ை 10.00 மணியளவில் கோ‍வையில் இணைய நண்பர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைத்து நண்பர்களையும் வருக, வருக என இனிதே வரவேற்கிறேம்.


விழா குறித்து சில கேள்வியும் & பதிலும்...


        முதலில் இது எதற்க்கு? அவசியம் என்ன?


        குழுமங்கள் மற்றும் பல இணைய நண்பர்களின் நீண்ட நாள் சந்திப்புதிட்டம் செயலுக்கு வந்துள்ளது.


        யார், யார் கலந்துக்க?


        நீங்கள் வலைபதிவராகதான் இருக்கனும் என்று அவசியமில்லை, குழுமங்களில் கலக்குபவராக இருக்கலாம், மன்றங்களில் வெழுத்துக் கட்டுபவர்களாக இருக்கலாம், இணைய தளங்களில் ஊக்கத்துடன் பணியாற்றுபவர்களாக இருக்கலாம். அட அவ்வளவு ஏனுங்க சும்மா நடப்பதை எல்லாம்வேடிக்கை பார்ப்பவராக இருக்கலாம். இணையம் மற்றும் தமிழ் இவ்விரண்டேநம்மை இணைப்பதாக இருக்கும்.


        எதைப் பற்றி பேச?


        பல்வேறு தலைப்புகள் குறித்தும் பேசலாம். விரைவில் தலைப்புகள்பட்டியலிட படும்.


        அட இன்னமும் கிளம்பலையா...?


        சரி சரி நீங்க கேட்பது புரியுது யாரை தொடர்புக் கொள்ளனும் என்பது தானே உங்க கேள்வி...


        முத்தமிழ் மஞ்சூர் ராசா - 9443854163


        தமிழ்பயணி சிவா -             9894790836


        மின்னஞ்சல் முகவரி - vanusuya@gmail.com


       
வருகை தருபவர்கள் தவறாது முன்னதாக தொடர்புக் கொண்டால் தேவையான வசதிகள் செய்ய உதவியாக இருக்கும்.


இணைய நண்பர்களின் சந்திப்பு, கோவையில்....


        


வருவதாக உறுதியளித்துள்ளவர்கள் பெயர் பட்டியல்...







சிறப்பு 
விருந்தினராக தமிழ்மணம் நிறுவனர் திரு.காசிலிங்கம் அவர்கள்



1.முத்தமிழ் மஞ்சூர் ராசா

2.தமிழ்பயணி சிவா

3.திருப்பூர் தியாகு

4.அனுசுயா

5.ஆசாம் சிவா

6.கபீரன்பர் உமேசு

7.புதுகை பாண்டியன்

8.நாமக்கல் சிபி

9.ஜேகே

10.விஜய்

11.கமல்

12.ஆனந்த்



நீங்களும் உங்கள் வருகைய‍ை இங்கே பின்னூட்டமிடுவதன்
மூலம் உறுதி செய்யுங்கள்....

Monday, June 18, 2007

சிவாஜி படம் அனுவின் பார்வை

அப்பப்பா ஒரு ஆறு மாசமா ஆடி தள்ளுபடி, ஆட்சி மாற்றம், மழை, வெயில் கொடுமை எதுவுமே தெரியாத அளவு சிவாஜி பட வெள்ளத்துல மூழ்கடிச்சிடுச்சு நம்ம தமிழ்நாட்டு மக்கள. நான் பொதுவா சினிமாவுக்கே போக மாட்டேன் ஏதோ ரெண்டு வருசத்துக்கு ஒரு தடவை போனா உண்டு. அப்டியாபட்ட நானே சிவாஜி படம் பாக்க வேண்டியதா போயிடுச்சு. எல்லாம் நேரம்....

என் கல்லூரி நண்பனோட கல்யாணத்துக்கு போயிட்டு வரும்போது நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து போயே ஆகனும்னு அடம்பிடிச்சு கூட்டிட்டு போயிட்டாங்க. இதுக்கு டிக்கட் விலை வேற ரொம்ப அதிகம் (ரொம்ப டூ மச் :( )

சரி சொந்த நொந்த கதை அப்புறம் படத்த பத்திய என் கருத்துக்கள் கீழே
ஞாபகம் வருதே ஞபாகம் வருதே

1. எத்தன நாளைக்கு ஒரு தனி மனிதன் ஆறு மாசத்துல நாட்ட திருத்துவான்னு படம் எடுப்பீங்க.? லஞ்சம் கேட்கற அதிகாரிங்ககிட்ட ஏன் நான் லஞ்சம் தரனும் எதுக்கு நான் தரனும்னு அதே கேள்விகள். (இந்தியன் படம் ஞாபகம் வருதே)
2.அப்புறம் திருடுன பணத்த பழைய பேப்பர் கூட ஒழிச்சு வெக்கிறது (ஜென்டில்மேன் படம் ஞாபகம் வருதே)
3. பாடல் காட்சிகள் குறிப்பா சகானா பட காட்சி அமைப்புகள் (ஜீன்ஸ் படம் ஞாபகம் வருதே)
4. அதே போல ஒரு சாப்ட்வேர் என்ஜினியர் 250கோடி சம்பாதிக்க எவ்வளவு வருசம் பாடுபடனும் அதே மாதிரி படிச்சு முடிக்கவே 25 வருசம் போயிடும் அப்டீனா அவரோட வயசு என்ன அந்த வயசுல காதல் பண்ணி கல்யாணம் பண்ணி இப்டி லாஜிக் ரொம்ப இடிக்குதே? (லாஜிக் பார்த்தா சினிமாவே பாக்க முடியாதுனு என் ப்ரெண்ட் சொன்னா அது கரெக்ட்தானுங்க :) )

சிறப்பு அம்சம்
1. நல்ல நகைச்சுவை காட்சிகள் பரவாயில்ல வாய்விட்டு சிரிக்க வெக்கறாங்க சில இடங்கள்ள.
2. ரஜினி நடிப்பு பரவாயில்ல நல்லாயிருக்கு.
3. இசை சிறப்பாயிருக்கு ஆனா பாடல் வரிகள் புரியற மாதிரி அமைச்சிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.

இதெல்லாம் என்னோட சின்ன அறிவுக்கு எட்டுன விசயங்கள். எனக்கு இருக்கற சின்ன மூளைக்கு இவ்ளோதான் யோசிக்க முடிஞ்சுது. என் கேள்வி ஒன்னே ஒன்னுதான் கடைசியா, இவ்ளோ செலவு பண்ணி இவ்ளோ பெரிய பெரிய ஆளுங்க எல்லாருமா சேர்ந்து இந்த படம்தான் எடுக்க முடிஞ்சுதா? கொஞ்சம் யோசிக்க வேண்டிய விசயம். :)

Monday, June 04, 2007

இது வெறும் விளம்பர பதிவு :)

வணக்கம் மக்களே ரொம்ப நாள் ஆச்சு பதிவு போட்டு. எல்லாம் இந்த அப்ரைஸல் பண்ற வேலை. தலை சூடானதுதான் மிச்சம் வேற ஒன்னும் காணோம். எவ்ளோ நேரந்தான் வேலை செய்யறா மாதிரியே நடிக்கறது அதான் திரும்ப பதிவு போட வந்துட்டேன். கடந்த ஒரு மாசத்துல பெரிசா ஒன்னும் நடக்கல அது அது அப்டி அப்டியேதான் போயிட்டு இருக்கு. நம்ம கச்சேரி தேவ் போட்ட பதிவுல மிகப்பெரிய கமெண்ட் (கதை) எழுதுனது தவிர வேற ஒன்னும் பெரிசா கானோம்.

அதுபோக ரெண்டு வாரம் முன்ன நம்ம பாலா அண்ணாச்சி மற்றும் ரவி, செல்லா தலைமைல வெற்றிகரமா ப்ளாக்கர் மீட் முடிஞ்சிருக்கு. உண்மையா பாராட்ட வேண்டிய விசயம். எனக்கு வேற சில சொந்த வேலை இருந்ததால போக முடியல. அடிச்சு பிடிச்சு போய் ரவியையும் வனஜ்ராஜாவையும் சந்திச்சேன். இதுல நம்ம பாலா அண்ணாச்சிக்கு போன் பண்ணா திட்டுவாருனு பயந்து போன் பண்ணல அதனால அவரு மனம் வருத்தமடைஞ்சு பதிவெல்லாம் போட்டாரு. (சாரிங்க :( ).




ஒரு மனுசி வேலை நல்லா பண்றானா அதுக்காக இப்டியா திரும்ப திரும்ப ஆணிய குடுத்து உக்கார வைக்கிறது முடியலப்பா சாமி. ஒரு ப்ளாக் எழுத முடியல ப்ளாக்ல போட்ட கமெண்ட்டுக்கு பதில் போட முடியல என்ன கொடுமை இது சாமி (டயலாக் மாத்திட்டேன் :)). இந்த நேரத்தில நம்ம நண்பர்கள் எல்லாரும் மெயில் அனுப்பி கேட்கிறாங்க. நீங்க ப்ளாக் எழுதறத நிறுத்திட்டீங்களானு? (உள்ளுக்குள்ள அவங்களுக்கெல்லாம் சின்ன சந்தோசம்). இல்லீங்க நான் இன்னும் உங்களையெல்லாம் சுலபமா விட்டுற மாட்டேன். வந்துட்டேயிக்கேனுங்க. :)

Saturday, April 21, 2007

தமிழ்நாடு தேசிய மலர்


சித்திரை கனி முடிஞ்சு ஆபீஸ் வந்தவுடன் என் சகா ஒருத்தரு கேரளா காரர் தன் கணிணி பெட்டியில் மஞ்சள் நிற கனி பூ படம் வச்சிருந்தாரு. நான் போ்ய் இந்த பூ எனக்கு ரொம்ப பிடிக்கும் இதோட பேர் என்னங்கனு கேட்டேன். உடனே அவரு இதுக்கு பேரு கனிக்கொன்னா பூ இத வச்சுதான் நாங்க விஷு பண்டிகை கொண்டாடுவோம்னு சொன்னாரு. அத்தோட விட்டா பரவாயில்ல இதுதான் எங்க மாநிலத்தோட பூ (State flower of Kerala) அப்டீனு சொன்னாரு. சொல்லிட்டு உங்க மாநில பூ எதுனு வேர கேட்டாரு பாருங்க ஒரு கேள்வி. அதுலதான் பிரச்னையே நானும் தேடறேன் தேடறேன் தேடிட்டேயிருக்கேன். கிடைக்க மாட்டேங்குது.


கூகுள் ஆண்டவர கேட்டேன், விக்கி அண்ணன கேட்டேன் ஒன்னும் பிரயோசனம் இல்ல. என் அரட்டையில ஸ்டேடஸ் போட்டு பார்த்தேன். என் நண்பர்களுக்கும் தெரியல. சிலரு சட்னு தாமரைனு சொல்லி சிரிக்க வெச்சாங்க. சிலர் அப்டி ஒரு விசயம் இருக்கானு கேள்வி கேட்டாங்க. இப்டியே போகுதே தவிர பதில் இன்னும் கிடைக்கல. நம்ம ப்ளாக்க படிக்கற மக்கள் யாராவது விபரம் தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுங்கப்பா மாநிலங்களுக்குனு மலர் உண்டா? அதாவது தேசிய மலர் போல. அப்டியிருந்தா நம்ம மாநில மலர் எதுனு ‍சொல்லுங்க? அது சம்பந்தமா இணையத்துலயிருந்தா லிங்க் கொடுங்கப்பா.

Wednesday, April 18, 2007

அழகே அழகே

அழகு பத்தி எழுத சொல்லி தேவ் சொல்றாரு ஆனா பாருங்க எனக்கு இந்த சனி உச்சத்துல இருக்கும் போலயிருக்கு. கடந்த 2 வாரமா வீட்டுல இணையம் வேலை செய்யில சரினு ஆபீஸ் வந்தா தமிழ் வர மாட்டேங்குது இப்டி பல பிரச்னைகளுக்கு நடுவுல ஒரு வழியா சுடர ஏத்தி முடிச்சுட்டு பாத்தா நம்ம தேவ் அழகபத்தி எழுத சொலறாரு. ம்ம்ம்ம்... எனக்கு எது அழகுனு தோணுதோ அதை பத்தி ‍எழுதறேன்.

1. மலர்கள்


எனக்கு அழகுனு சொன்னவுடனே ஞாபகம் வரது மலர்கள்தான். எந்த பூவ பார்த்தாலும் எனக்கு அழகாதான் தெரியுது. எங்க பூ படம் பார்த்தாலும் புடிச்சு நம்ம கணிணியில நிறைச்சுடுவேன் :). மலர்களை பார்க்கும்போது ஏற்படும் உற்சாகம் தனியானது.

2. இயற்கை

அழகுங்கறது என்ன பொருத்தவரைக்கும் மனதுக்கு உற்சாகம் தரக்கூடியதா இருக்கனும் அப்டி பார்த்தா இயற்கைய விட்டா சிறந்த அழகு எதுவும் இல்லை. மலைகள், பச்சை பசும் புல் வெளிகள், பனிவிழும் காலை நேரம், பறவைகள், பூக்கள் இப்டி சொல்லிகிட்டே போகலாம். இயற்கையில எல்லாமே அழகுதான்.

3. புன்னகை

மனுசனோட முகம் எப்டியிருந்தாலும் சரி புன்னகை செய்யும்போது அழகா ஆயிடுவாங்க அது புன்னகையின் சிறப்பு. எவ்ளோ அழகான முகமாயிருந்தாலும் புன்னகையில்லாம உம்முனு இருந்தா அழகு கெட்டு போயிடுது. ஒரு சின்ன புன்னகை மிக அழகா மாத்திடும். எனக்கு புன்னகை செய்யற முகம் எல்லாம் அழகுதான் :)

4. கருணை முகம்

பொதுவா எல்லாருக்கும் அவங்கஅவங்க அம்மாதான் முதல் அழகி. அவங்க எப்டியிருந்தாலும் அவங்க முகம் மடடும்தான் அழகா தெரியும் எல்லா குழந்தைகளுக்கும் அதுக்கு ஒரே காரணம் அன்புதான். எவ்ளோ முகங்களை பார்த்தாலும் அவங்க அம்மா முகம் மட்டும் அழக தெரிய காரணம் அவங்களோட தூய்மையான அன்புதான். அன்னை தெரசா எல்லாருக்கும் அழகா தெரிய காரணமும் அன்பு கருணைதான். நம்மிடம் அன்பா இருக்கற எல்லாரோட முகமும் அவங்கவங்களுக்கு அழகுதான்.

5. குழந்தைகள்.

எந்த நிறம் சாதி உயரம் எடை எப்டியிருந்தாலும் எல்லா குழந்தைகளும் அழகுதான். அவங்க சிரிப்பு அழுகை எல்லாமே அழகுதான்.

அப்பாடி எப்டியோ தேவ் எழுத சொன்னத எழுதிட்டேன்.

நான் கூப்பிடறவங்க...

கொங்கு ராசா
இளா.
இராகவன்

Wednesday, April 11, 2007

சுட்டும் விழிச் சுடரே...

இத்தனை பெரியவர்கள் ஏந்திய சுடரை நம்பிக்கையுடன் இச்சிறுப் பெண்ணிடம்கொடுத்த அய்யா ஞானவெட்டியான் அவர்களுக்கு நன்றி. என்னால் இயன்ற வரை சுடரைசிறப்பாக ஏற்ற முயற்சித்துள்ளேன்.

1.இக்காலகட்டத்தில், பணிபுரியும் மங்கையருக்கு உண்டாகும், அல்லது பிறரால் உருவாக்கப்படும் சரவல்கள் எத்தன்மையது? அவைகளால் ஏற்படும் மனத் தாக்கத்தைப்போக்க அல்ல எதிர்கொள்ள எடுக்கவேண்டிய செயல்கள் என்ன?

முதலில் சரவல்கள் என்றால் சரியாக விளங்கவில்‍லை எனினும் இடையூறுகள் எனக்கொண்டு நான் பதில் கூறுகிறேன். பொதுவாக தற்காலத்தில் பணிபுரியும் மங்கையர்கள் மட்டும் அல்ல, அந்த காலத்தில் இருந்து பெண் வெளியே செல்லும் போது பலப்பல இடையூறுகளை சந்தித்துதான் வருகிறாள். ஆனால் இக்காலகட்டத்தில் சற்று குறைந்துள்ளது என்பது எனது கருத்து. ஆனால் இந்த சரவல்களை சமாளிக்க முதலில் பெண்களுக்குள்ளே ஒற்றுமை வேண்டும். அது கொஞ்சம் குறைவாகவே உள்ளது என்பது என் கருத்து. குறிப்பாக படிக்காத பெண்களிடம் இருக்கும் ஒற்றுமை கூட படித்த பெண்களிடம் இருப்பதில்லை.

பிரச்சினைகள் அற்ற மனிதர்கள் தான் யார் உள்ளனர். பெண்களுக்கு வரும் பிரச்சினைகள் மட்டும் பிரச்சினையா உடல் ஊனமுற்ற நண்பர்களுக்கு வருவதை காணும் போது பெண்கள் பிரச்சினை எனப்படும் வாய்க் கேலி போன்றவை சற்று தாக்கம் குறைவாகவே இருக்கும்.நமது பிரச்சினையை பிறரிடம் தொடர்ந்து சொல்லுவதால் புலம்பல்வாதி (புலம்பல் கேசு) என்ற பெயர்தான் கிடைக்கும். முடிந்த அளவு ஒரு பிரச்சினைக்கு தீர்வை கண்டறிதல்தான் அவசியம். சரவல்களை விளக்கி பலருக்கும் சொல்லுவதால் முன்னேற்றம் ஏதும் கிடையாதே.

"குற்றம் பார்க்கின் சுற்றம் கிடையாது"

2.இணைய அனுபவம் எப்படி உள்ளது? வலைப்பூக்களில் நிலவி வரும் சாதி சமய, ஆத்திக நாத்திக விவாதங்களால் அவைகளைப் படிப்பவரின் மன நிலை எவ்வாறு பாதிக்கப்படுகிறது? இவைகளால் பயனுண்டா? அல்லது கால விரயமா?

இணைய அனுபவம் என்னை பொறுத்த வரையில் மசாலா கலவை போல எல்லா சுவையும் கலந்தே இருக்கிறது. ஆனால் நிறைய நல்ல நண்பர்களை அறிமுகம் செய்தது இந்த இணையம்தான். மேலும் சில எதிர்கருத்துக்களை அறிய உதவியதும் இணையம்தான் சில விசயங்களில் இப்படி கூட யோசிக்க முடியுமா என வியக்கவும் வைத்துள்ளது.

சாதி, சமய, ஆத்திக, நாத்திக விவாதங்கள் இன்று இந்த இணையத்தில் மட்டும் நடக்கும் நிகழ்வு அல்லவே. இது தொன்று தொட்டு பல பெயர்களில் நடைபெற்றுள்ளது. சைவ, வைணவ சண்டை, பகுத்தறிவு பற்றிய சர்ச்சை, மத சண்டை, பெண்ணுரிமை இப்படி பல தலைப்புகளில் விவாதங்கள் பழங்காலத்தில் இருந்து நடந்து கொண்டே உள்ளது. இதனால் எந்த பயனும் ஏற்பட்டதாக காணோம். ‍வெறும் அரசியலுக்கும் புகழ் பெறவும் மட்டுமே உதவுகிறது என்பது என் கருத்து. என்னதான் விவாதங்கள் நடத்தினாலும் இன்னும் தெய்வ வழிபாடு செய்பவர்களும் தெய்வத்தை எதிர்பவர்களும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். இந்த விவாதம் அவர்களுக்கு உதவாது சொந்த அனுபவம், வாழ்க்கை சூழ்நிலை மட்டுமே இதை தீர்மானிக்கிறது.

இந்த விவாதங்களால் மன அமைதி பாதிப்படைகிறதா என்றால் இல்லை என்றே கூறலாம். சில விவாதங்களை பார்க்கும்போது அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களோ என எண்ணத் தோன்றுகிறது. விவாதிப்பவர்கள் ஒரு விசயத்தை மனதில் கொள்ள வேண்டும். நாம் கூறும் கருத்துக்கு கட்டாயம் ஒரு மாற்றுக் கருத்து உண்டு என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதை விடுத்து நாம் சொல்லும் கருத்து மட்டும் மிகச்சிறந்தது இதை விட வேறு இல்லை என எண்ணக்கூடாது.

"கற்றது கைம்மண் அளவு.. கல்லாதது உலகளவு"

3. "தமிழ் வாழவேண்டும்; அழிந்துவிடலாகாது." இது குறித்து இன்றைய இளைய தலைமுறையினரின் கருத்து என்ன? செயல்கள் எப்படி உள்ளன?

இந்த கால இளைஞர்களிடம் தமிழ் நன்றாகவே வளர்ந்து வருகிறது என்பது என் கருத்து. தினம் தோன்றும் தமிழ் வலைப்பூக்களை பார்த்தாலே தெரிகிறது. மேலும் இந்த இளைய தலைமுறையினர் யாரும் தமிழ் வாழ்க என கோஷம் போட்டு அதை செயல் படுத்துவதில்லை அமைதியாக தங்களின் கருத்துக்களை கணிணியில் தட்டிவிட்டு இருந்து விடுகிறார்கள். வீதியில் வந்து போராட்டம் நடத்த தயாராக இல்லை. படிக்கும்வரை எப்படியோ ஆனால் படித்து வேலையில் அமர்ந்த பின்பு தங்களின் தாய்மொழி மீதான பற்று அதிகப்படுவதாகவே தோன்றுகிறது.

"காய்த்த மரமே கல்லடி படும்"

4.மங்கையரின் சுதந்திரம் பற்றித் தங்களின் கருத்துக்களை விரிவாக எழுதவும்.

மங்கையரின் சுதந்திரம் பற்றி என் கருத்து மங்கையர்க்கு தேவையான அளவு சுதந்திரம் இருக்கிறது. இதை பயன்படுத்தி முன்னேற வேண்டியது பெண்களின் வேலைதான். இந்தியஅரசின் அரசியல் அமைப்பில் இருந்து நடைமுறை வாழ்க்கை வரை பெண்ணுக்கு படிப்பு, உடை, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, கருத்து என அனைத்திலும் முழு சுதந்திரம் இருந்து கொண்டுதான் உள்ளது. அதை பயன்படுத்தி முன்னேற வழி பார்க்க வேண்டும் அதை விடுத்து பெண்ணுரிமை சுதந்திரம் என பேசிக்கொண்டே இருப்பது அநாவசியம். சுதந்திரம் அதிகம் உள்ள மேற்கத்திய நாடுகளில் கூட பெண் அதிபர்களோ அதிகபட்சம் பெண்கள் அரசியலில் சாதித்ததோ இல்லை ஆனால் இந்தியாவில் மட்டுமே பெண்கள் அரசியலில் கூட அதிக அளவில் சாதித்துள்ளார்கள்.
இந்த வலைப்பூவில் எடுத்துக்கொண்டால் கூட பெண் வலைபதிவர்கள் இடும் பதிவுகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் பல ஆண் வலைபதிவர்களுக்கு கிடைப்பதில்லை. இதற்கு காரணம் மிக குறைந்த எணணிக்கையில் பெண்கள் இருப்பதால் அதிக அளவில் கவனிக்கப்படுகிறார்கள் அவர்கள் கூறும் கருத்துக்களுக்கு இருக்கும் முக்கியத்துவமும் அதிகம். இங்கு பெண் எதிர் கொள்ளும் அதே அளவு பிரச்னைகளை ஆண்களும் எதிர் கொள்கிறார்கள் ஆனால் அவர்கள் அதிக அளவில் இருப்பதால் அந்த கருத்துகள் அவ்வளவாக முக்கியத்துவம் பெறுவதில்லை. இதை நல்ல விதமாக உபயோகிக்க வேண்டிய கடமை பெண் பதிவர்களுக்கு உள்ளது. பெண் முயற்சி செய்தால் முன்னேற இந்த நாடு எல்லா உதவியும் செய்கிறது. ஆனால் இது பத்தாது என்று மேலும் பல சிறப்பு சலுகைகளை எதிர்பார்ப்பது அநாவசியம் என்பதே என் கருத்து.

"மாதா பிதா குரு தெய்வம் "

5.தங்களுக்குப் பிடித்த தங்களின் பதிவு, அல்லது மிகவும் பிடித்த தலைப்பில் ஒரு பதிவை இடவும்.
இதுவரைக்கும் எனக்கு பிடிச்ச மாதிரி பதிவு எழுதுனதே இல்லீங்க (பதிவு ஏதாவது போட்டாதான :)) எனக்கு பிடித்த தலைப்பில் பதிவு இனிவரும் நாட்களில் எழுதலாம் என எண்ணியுள்ளளேன். இப்போதைக்கு இந்த சுடரை ஏத்திட்டேன்.

"சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப் பழக்கம்"

அடுத்தது நமது பெயரிலி(அனானி) புகழ் செந்தழல் இரவி அவர்களிடம் ஒப்படைக்கிறேன்.
அவருக்கு வைக்க ஆசைப்படும் ஆப்புகள்..

1. சில வருடங்களாக ஏறுமுகத்தில் இருந்த வளாகத்தேர்வுகள் இந்த ஆண்டு சற்று குறைந்துள்ளது. இந்த போக்கின் எதிர்காலம் என்ன?

2. E-lanes வகை வேலைகள் தமிழர்கள் எந்த அளவு பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார்கள். நடைமுறையில் இந்த வகை வேலைகளின் எதிர்காலம் மற்றும் வெற்றி சாத்தியகூறுகள் என்ன?

3. நாஸ்காம் போன்ற நிறுவனங்கள் சமீபத்தில் குடுத்துள்ள அறிக்கையில் 25% மாணவர்கள் கூட வேலைக்கு தகுதியற்றவர்கள் என கூறியுள்ளது. இது குறித்து தங்களின் சொந்த கருத்து மற்றும் சொந்த அனுபவம் என்ன?

4. இந்த கால இளைஞர்கள் வேலைக்கு சேர்ந்த பின்பு பொருளாதாரத்தை எதிர்காலத்திற்காக சேர்ப்பவர்கள் அதிகமா? அல்லது ஆடம்பரத்தில் மூழ்கி விடுகிறார்களா?

5. இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் வேலையின் உழைப்பை விட அதிக ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால்மற்ற துறையினரின் வாழ்க்கை தரமும், பொருளாதாரமும் பாதிக்கப் படுகிறது. இந்த அதீத ஊதியம் பற்றிய தங்களின் கருத்துதேவைதானா?

Saturday, March 31, 2007

காந்தாரக் கலை

நமது பள்ளிகளில் இன்றும் மறவாது சொல்லிதரும் வரலாற்றில் முக்கியமானது காந்தாரக் கலை. இது புத்தமதத்தின் சார்பாக தோன்றி அதிகம் அது குறித்த கலைச் செல்வங்களை வழங்கி மறைந்த ஒன்றாகும். பாகிஸ்தான் தேசம் இந்த வாரத்தை (ஏப்ரல் 1வரை) காந்தாரக் கலை வாரமாக கொண்டாடுகிறது. பல்வேறு நெளிவு,சுளிவுகளை கொண்ட கலைப் படைப்புகளை தன்னகத்தே கொண்டது காந்தாரக் கலை. சில ஒளிப்படங்கள்...




புத்தரின் சிலை



புத்தர் பெருமான் தனது சீடர்களுடன் கையில்
கப்பறை எனும் உணவுஏற்க்கும் பாத்திரத்துடன் அமர்ந்துள்ளார். மேலாடையும், சிகையும் சுருள் வடிவம்பெற்றதே காந்தாரக் கலை எனப்படும். இனி வருவது நம் தாய்குலங்களுக்காக. அவர்கள் ஆதரவு இன்றி எந்தநாகரீகமும் வளராதே. இன்னமும் சொல்ல போனால் அவர்கள் தான் நாகரீகஅளவுக்கோல் ஆவர்கள்.



தங்க காதணிகள்.






தங்க கைக்காப்பு(Bracelet)




தங்க நெக்லஸ்

அடுத்து வருவது... புத்தப் பெருமான் அழகிய உருவம்



புத்தரின் தியான முத்திரை



புத்தரின் முகம்



தாமரை மலர் ஏந்திய புத்தர் கரம்



புத்தப் பெருமானின் அழகிய உருவச் சிலை.

இவ்வளவு அன்பு, அஹிம்சை என்று போதித்தும் காந்தாரகலை எனும் அழகிய ஒரு கலையால் அமைக்கப் பட்ட ஒரு படைப்புக்குநம் மனித இன நவநாகரீக வளர்ச்சியில் ஏற்பட்ட நிலைமை என்ன தெரியுமா... ஆம். இரத்தக் கண்ணீர் விட ‍வேண்டிய படம்தான் கலங்கிய மனதுடன்...



தீவிரவாதிகளால் அழிக்கப் பட்ட பாமியான் குன்றுச் சிலை. இடது புறம்(முதல் பாகம்) சிலை உள்ளது. முன்புறம் ஒரு மனிதன் நின்றுக் கொண்டு உள்ளான் பாருங்கள். மனிதனை விட எவ்வளவுஉயரம் அப்பப்பா. வலது புறம் (இரண்டாம் பாகம்) ஏவுகணை மற்றும்பீரங்கி தாக்குதலால் அழிக்கப் பட்டு விட்டு காலியாகி விட்ட இடம்.இங்கும் முன்புறம் பல மனிதர்கள் நின்று கொண்டு உள்ளார். இனிவரும் நாட்களிலாவது கருணையும், சகிப்பு தன்மையும்உலகெங்கும் பரவட்டும். புத்தம் தர்மம் கச்சாமி...!!! சங்கம் தர்மம் கச்சாமி...!!!

Friday, March 30, 2007

கோடையும் குளுமையும்

கோடை வெம்மை இங்கே வாட்டி எடுக்குது. இன்னமும் தமிழகத்தின் பிற பகுதிகளில் அக்னி நட்சத்திர ‍வெப்பம் ஆரம்பம் ஆகவில்லை. அதற்க்குமுன்னதாகவே ஆரம்பித்து முன்னரே முடிந்திடும் கோவையின் கோடை இப்போது சரியாக உச்சத்தில் உள்ளது.



அட அதுக்காக என்ன செய்யலாம் தர்பூசிணி போன்ற பழங்களை நாடலாம்.ஆனாலும் வயிறு நிறைந்த பிறகு அதிகம் சாப்பிட இயலாதே... ஆதனால் கண்நிறைய குளு குளு வென பார்த்து இரசிக்கலாம் அல்லவா இந்த மாதிரியான ஒளிப் படங்களை...











மேட் இன் ஜப்பான் மோகம் கொஞ்ச நாள் முன்னர் வரை நம்ம ஊருலேஇருந்ததில்லே அதனால் இந்த அருவி படத்தை சப்பானிய நாட்டில் இருந்து சுட்டது. ஊரு பேரு டக்கசிக்கோ-க்யோ (Takachiho-Kyo Gorge).

Thursday, March 29, 2007

சிரிக்கலாம் வாங்க...

பின்வரும் சித்திரங்கள் நகைச்சுவை என்றும் ஆகாது வாய் விட்டும்சிரிக்கும் அளவு இருக்காது.. ஆனால் இதழோர புன்னகைக்க வைக்கும்.இதன் பெயர் தான் அங்கதம் என்பதோ அல்லது இந்த வகைக்கு என்னபெயரோ...







Thursday, March 08, 2007

மகளிர் தினம்



ஆயகலைகள் அனைத்தும்
தளிர் கரங்களில் ஏந்தி...
ஆருயிர் அன்னையாய்
அன்பு சகோதரியாய்
உயிரில் பாதி மனைவியாய்...
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும்
தோழிகள், நண்பிகள்,
சகோதரிகள், தாய்மார்களுக்கும்

மகளிர் தின வாழ்த்துகள்...!!!

அன்புடன்,
அனு

Sunday, February 11, 2007

இணையாத பாலம்





"இணையாத பாலம் இருந்தென்ன லாபம்"
இந்த ஸ்லோகன்தான் இப்ப கோவையில் அதிகமா பேசப்படும் வார்த்தைகள். கோவை கிழக்கு தொகுதியை சேர்ந்த ஒண்டிப்புதூர் அப்டீங்கற ஊர்ல ஒரு நாலு வருசத்துக்கு முன்னாடி ரயில்வே மேம்பாலம் கட்ட ஆரம்பிச்சாங்க. ஆரம்பிச்சப்ப ‍ஒரே ஜோராதான் இருந்தது. அந்த ரோடு திருச்சி ரோடு அதிகமான அளவு போக்குவரத்து உள்ள சாலைதான். அதை அடைத்துவிட்டு ஊருக்கு உட்புறமாக உள்ள சிறிய சாலையில் அதுவும் இரண்டு ரயில்வே லைன்களை கடந்து செல்லும் பாதையை ஒதுக்கினார்கள். சரி ஒரு வருடம்தானே என்ன செய்வது என்று அனைவரும் பொருத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.


பிறகு திடீர் என்று பாலத்தின் நடுவே அதாவது இருப்பு பாதை மேல் கட்ட வேண்டிய பகுதியை மட்டும் அப்படியே விட்டு விட்டார்கள் கேட்டதற்கு அது மத்திய அரசு வேலை என்று விளக்கம் வந்தது. சரினு அதுக்கு ஒரு வருசம் போயிடுச்சு. இப்டியே கட்டி கட்டி கடந்த நான்கு வருட காலமா கட்டியும் இன்னும் இணைய மாட்டேங்குது பாலம். ஸ்பீட் படத்துல கிளைமேக்ஸ்ல வர்ர மாதிரி வண்டியெல்லாம் வேகமா போயி ‍‍ஹை ஜம்ப் பண்ணிதான் போகனும் போலயிருக்கு.


இதுல மாற்று பாதையில போயிட்டு இருக்குற பேருந்துகள்ல பயணம் செய்யற பயணிகள் எல்லாம் ரொம்ப பாவப்பட்டவங்க. ஏன்னா எப்ப பாரு ரெண்டு ரயில்வே லைன்லயும் ரயில் போயிட்டும் வந்துட்டும் இருக்கும் அதனால அடிக்கடி கேட் போட்டு குறைந்தது முக்கால் மணி நேரமாவது நிறுத்தி வச்சிடுவாங்க. குறிப்பிட்ட நேரத்துக்கு யாராலயும் போக வர முடியாது. இதுல கொடுமை என்னன்னா மழை வந்தா அந்த வழியில ஒரு சின்ன ஓடை உருவாகி தண்ணி போயிட்டேயிருக்கும். அப்பவெல்லாம் இந்த இரு சக்கர வாகனத்துல போறவங்க நிலைமைய நினைச்சாதான் பரிதாபம்.


ஆக மொத்தத்தில ஊர்ல பல பேருக்கு இந்த பாலம் திறக்கலையேனு மிகப்பெரிய வருத்தம் இருக்குது இதுனால பல கோடி பொருளாதார நஷ்டம், எரிபொருள், நேரம் இப்டியே சொல்லிட்டே போகலாம். இதைய எப்ப திறப்பாங்கனு தெரியல ஆனா கடந்த ஒரு மாதமா கொஞ்சம் சுறுசுறுப்பா ரயில்பாதை மேல இருக்கற பகுதிய இணைச்சிட்டு இருக்காங்க.





இவ்வளவு கஷ்டத்துக்கு நடுவிலயும் இப்ப திறப்பாங்க அப்ப திறப்பாங்கனு மக்களும் பொறுமையா நாலு வருசத்த ஓட்டிட்டாங்க. இப்ப அதெல்லாம் பிரச்னையில்ல கோவையில பொதுவா பொழுது போக்கறதுக்கு ஏத்த மாதிரி வசதியா பூங்காக்களோ இல்ல கடற்கரை ஆற்றங்கரை எதுவும் இல்ல. அதனால நம்ம ஊர் மக்கள் எல்லாம் என்ன பண்ணுனாங்க நடை பயிற்சி, உடற் பயிற்சி, மாலையில ஒரு சின்ன வாக்கிங் போக இப்டி எல்லா விதத்திலயும் அந்த பாலத்தைதான் பயன்படுத்திட்டு இருக்காங்க. இந்த பாலத்தை திறந்தா மக்களோட ஒரு பொழுதுது போக்கு இடம் இல்லாம போகப்போகுது. :(

Wednesday, January 03, 2007

கைத்தொ(ல்)லை பேசி

ரொம்ப நாளா கைத்தொலைபேசி வாங்காம இருந்தேன். எங்க அப்பாரு பாத்து சளிச்சு அவரே போயி ஒரு தொலைபேசி வாங்கிட்டு வந்து குடுத்து ஊர்ல எல்லாரும் வெச்சிருக்காங்க நீ மட்டும் ஏன் இல்லாம இருக்கனு சொன்னாரு. நானும் பவ்யமா எனக்கு எதுக்குங்கப்பா போனு அதான் வீட்ல ஒன்னு ஆபீஸ்ல ஒன்னும் இருக்குதே பத்தாதானு கேட்டேன். அவரும் விட்டனானு இல்ல இல்ல எல்லா புள்ளங்களும் வெச்சிருக்காங்க நீயும் வெச்சுக்கோனு சொல்லி குடுத்தாரு. பாவம் அவரு அதுக்கப்புறந்தான ஆரம்பிச்சுச்சு நம்ம அட்டகாசம். முதல் வேலையா நம்ப நட்பு வட்டங்களுக்கு நம்பர் குடுக்க ஆரம்பிச்சேன். அவங்களும் தாராளமா அள்ளி வழங்குனாங்க அவங்கவங்க நம்பர. சரி இது ஒரு ஆத்திர அவசரம்னா கூப்பிட பேச வசதியா இருந்துச்சு. அப்புறம் மெல்ல மெல்ல ஒவ்வொருத்தரா குறுஞ்செய்தி (SMS) அனுப்ப ஆரம்பிச்சாங்க. நானும் சரி பிரியா குடுக்கறாங்க அனுபவிப்போம்னு அனுப்பினேன். முதல்ல காலைல எழுந்தவுடனே எல்லாருக்கும் ஒரு குட் மார்னிங். என்னமோ நாம குட் மார்னிங் அனுப்பலீனா அவங்க எழுந்திரிக்காத மாதிரி. அப்புறம் ஒரு 9 - 10 மணி சுமாருக்கு ஒரு சர்தார்ஜி ஜோக். பாவம் இந்த சர்தார்ஜிங்க நம்மகிட்ட மாட்டீட்டு படாதபாடு படறாரு. அப்புறம் ப்ரெண்ட்ஷிப் பத்தி ஒரு செண்டி மெ‍‍‍‍சேஜ், இன்றைய தத்துவம்னு ஒரு கடி, அதுபோக கங்கூலி, அஜீத், விஜய், கேப்டன் படங்கள பத்தி ஒரு கடி இப்டீனு நாள் முழுக்க ஓடும். கடைசில நைட் குட்நைட் சொல்றது. நாம குட் நைட் சொல்லுலீனா யாரும் தூங்கவே போறதில்ல மாதிரி ஊருக்கே குட் நைட் சொல்லறது.
இதெல்லாம் பத்தாதுனு ஆபீஸ்குள்ள டீ சாப்பிட போகலாமா? பிரிண்ட் அவுட் பேப்பர் கொஞ்சம் எடுத்துட்டு வா இப்டினு ஆபீஸ்குள்ளயே மெ‍சேஜ்.
இதெல்லாம் போக இந்த நியூ இயர், நல்ல நாள் கெட்ட நாள் இப்டி எது வந்தாலும் வாழ்த்து செய்தி வேற லிஸ்ட் போட்டு அனுப்பறது. இதெல்லாம் போக போன் பேசறது வேற. அது எப்டிதான் கட்டுபடி ஆகுதுன்னே தெரியல. ஒரு சிலர் மணிக்கணக்கா பேசறாங்க பேசறாங்க பேசிகிட்டே இருக்காங்க. காது என்னத்துக்குதான் ஆகுமோ தெரியல. அதவிட அவ்ளோ நேரம் என்னதான் பேசுவாங்க. எங்கயிருந்துதான் மேட்டர் கிடைக்குதோ தெரியல. இதுல Hands free வேற மாட்டிக்கறாங்க. தூரத்துலயிருந்து பார்த்தா தன்னப்போல பேசற மாதிரியிருக்கு. சில சமயம் என்னடாயிது லூசாப்பா நீனு கேட்கற அளவு இருக்கும்.
ம் ஊருக்கெல்லாம் உபதேசம் பண்ணியாச்சு நாமளும் ஏதாவது இந்த வருசம் உருப்படியா பண்ணலாம்னு நினைச்சு இந்த வருசத்துலயிருந்து இந்த குறுஞ்செய்தி அனுப்பறது தொலை பேசியில பேசறது இதெல்லாம் படிபடியா குறைச்சுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். பார்ப்போம் கொஞ்சமாவது குறையுதானு. :)

Friday, December 29, 2006

முதலாம் பிறந்த நாள்.

2006 ம் ஆண்டு முடிஞ்சுது புது வருசம் பிறக்க போகுது அதே நேரம் என் வலைப்பூவுக்கும் ஒரு வருடம் முடியுது. அதனால ஒரு சின்ன பார்வை. ஏன்னா பெரியவங்க சொல்லியிருக்காங்கள்ள கடந்து வந்த பாதைய எப்பவும் மறக்க கூடாதுனு அதான்.

பொதுவா இந்த ஆண்டு என்னை பொறுத்த வரைக்கும் வலையுலக ஆண்டுனே சொல்லலாம். அந்த அளவு 2006 வாழ்க்கையில் அதிலும் தமிழ் வலை உலகம் நிறைஞ்சிருக்குது.

இந்த வருட ஆரம்பத்துலதான் வலைப்பூ (Blog) அப்படீனா என்னனே எனக்கு தெரியும். என் சகோதரர் அறிமுகப்படுத்தி வெச்சாரு. அப்ப முதன்முதலா நான் படித்தது நம்ம கொங்கு நாட்டு ராசாவோட வலைத்தளம்தான் அதுக்கு பிறகு ஜிராகவனுடையது அப்புறம் அப்டியே தமிழ்மணம் ‍ஜோதியில நானும் இணைஞ்சுட்டேன்.

நான் பாட்டுக்கு அடுத்தவங்க கட்டுரைய படிச்சுட்டு கமெண்ட் போட்டுட்டு இருந்தேன். திடீர்னு முதன் முதலா நான் இந்தியாவும் உலக அதிசயமும் அப்டீனு ஒரு கட்டுரை எனக்கு தோனுத எழுதுனேன். அதைய தினமலர் பத்திரிக்கையில பிரசுரம் பண்ணினாங்க உடனே எனக்கு ஒரு நினைப்பு அட நாமளும் பெரிய எழுத்தாளர் போல இருக்கு. இனிமே நாமளும் எழுதுவோம்னு கண்டதையும் கிறுக்க ஆரம்பிச்சேன். கொஞ்ச நாள் போனவுடனே படம் போட்டு கதை எழுதறது கொஞ்சம் ஈசியா இருந்துச்சு. ஒரு படத்த போட்டு அதுக்கு ஒத்து வரமாதிரி ரெண்டு லைன் எழுத வேண்டியது. இப்டியே கொஞ்ச நாள் ஒப்பேத்துனேன். :)))))

அப்புறம் எனக்கு இந்த பூக்கள் மேல ஒரு பைத்தியம். எங்க பூ படம் பார்த்தாலும் உடனே புடுச்சு போட்டுடுவேன். அப்டியே எழுதி எழுதி கடைசில பூக்கள பத்தி மட்டுமே எழுதற நிலைமைக்கு வந்துட்டேன். கடைசியா கவிதைங்கற பேர்ல ஒரு கிறுக்கல் வேற.

ஆனா போன மாதம் திடீர்னு ஜி.கெளதம் வைச்ச போட்டில ஆறுதல் பரிசு வாங்கி குங்குமத்துல வேற பப்ளிஷ் பண்ணுனாங்க. அது ஒரு சந்தோசம். அப்பப்ப நான் எழுதி அடுத்தவங்கள தொந்தரவு பண்ண வேண்டாம்னு நினைக்கும் போது ஏதாவது ஒரு பரிசு கொடுத்து தொடர்ந்து எழுத வைச்சிடுறாங்க. பாவம் படிக்கறவங்க.

இந்த வலையுலகத்தை பொருத்த வரைக்கும் நான் ஒரு வருடக்குழந்தை. ஆனா இந்த ஒரு வருடத்துல கற்றதும் பெற்றதும் நிறைய நிறைய.
நிறைய நிறைய நண்பர்கள். நிறைய விதவிதமான மக்களை பற்றிய அறிமுகம். இந்த உலகத்தை சுருக்கி சின்னதாக்கிடுச்சு இந்த வலையுலகம். ஒரே விசயத்தை மத்தவங்க எவ்வளவு விதமா நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்க முடிஞ்சுது.

இனிவரும் அடுத்த ஆண்டிலாவது ஏதாவது உருப்படியா எழுதலாம்னு நினைக்கிறேன். :))

Wednesday, November 22, 2006

மழை....



எட்டிப்பிடிக்க முடியாத ஆகாயத்திற்கும்
எட்டநிற்கும் மண்ணிற்கும்
இடையில் ஒரு பிணைப்பினை
ஏற்படுத்தும் நீ கூட ஒரு அஞ்சலகம்தான்

கார்மேகமாய் காட்சி தந்து
நீ வரும் முன்னே இப்பூமிக்கு
உன் வாசத்தைக் கொடுத்து
இம்மண்ணிற்கு வளம் கொடுக்கும்
நீ கூட ஒருதாய் தான்.

உன்னில் நனைந்து என்னைத்
தேற்றி இயற்கை வியந்து என்
சோகத்தை மறப்பதால்
ஆம்! உன்னை நேசிக்கிறேன்.
நீ கூட எனக்கு ஒரு
எட்டாம் அதிசயம்தான்!
எட்டும் அதிசயம் கூட.!